சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் |
ஏழாம் திருமுறை |
7.87 திருப்பனையூர் பண் - சீகாமரம் |
மாடமாளிகை கோபுரத்தொடு
மண்டபம்வள ரும்வளர்பொழில்
பாடல் வண்டறையும்
பழனத் திருப்பனையூர்த்
தோடுபெய்தொரு காதினிற்குழை
தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின்
றாடு மாறுவல்லார்
அவரே அழகியரே.
|
1 |
நாறுசெங்கழு நீர்மலர்
நல்லமல்லிகை சண்பத்தொடு
சேறுசெய் கழனிப்
பழனத் திருப்பனையூர்
நீறுபூசிநெய் யாடிதன்னை
நினைப்பவர்தம் மனத்தனாகிநின்
றாறு சூடவல்லார்
அவரே அழகியரே.
|
2 |
செங்கண்மேதிகள் சேடெறிந்து
தடம்படிதலிற் சேலினத்தொடு
பைங்கண் வாளைகள்
பாய்பழனத் திருப்பனையூர்த்
திங்கள்சூடிய செல்வனாரடி
யார்தம்மேல்வினை தீர்ப்பராய்விடி
லங்கிருந் துறைவார்
அவரே அழகியரே.
|
3 |
வாளைபாய மலங்கிளங்கயல்
வரிவராலுக ளுங்கழனியுள்
பாளையொண் கமுகம்
புடைசூழ் திருப்பனையூர்த்
தோளுமாகமுந் தோன்றநட்டமிட்
டாடுவாரடித் தொண்டர்தங்களை
ஆளு மாறுவல்லார்
அவரே அழகியரே.
|
4 |
கொங்கையார்பல ருங்குடைந்
தாடநீர்க்குவ ளைமலர்தர
பங்கயம் மலரும்
பழனத் திருப்பனையூர்
மங்கைபாகமும் மாலோர்பாகமுந்
தாமுடையவர் மான்மழுவினோ
டங்கைத் தீயுகப்பார்
அவரே அழகியரே.
|
5 |
காவிரிபுடை சூழ்சோணாட்டவர்
தாம்பரவிய கருணையங்கடலப்
பாவிரி புலவர்
பயிலுந் திருப்பனையூர்
மாவிரிமட நோக்கிஅஞ்ச
மதகரியுரி போர்த்துகந்தவர்
ஆவில்ஐந் துகப்பார்
அவரே அழகியரே.
|
6 |
மரங்கள்மேல்மயி லாலமண்டப
மாடமாளிகை கோபுரத்தின்மேல்
திரங்கல்வன் முகவன்
புகப்பாய் திருப்பனையூர்த்
துரங்கன்வாய்பிளந் தானுந்தூமலர்த்
தோன்றலுமறி யாமற்றோன்றிநின்
றரங்கில் ஆடவல்லார்
அவரே அழகியரே.
|
7 |
மண்ணெலாம்முழ வம்மதிர்தர
மாடமாளிகை கோபுரத்தின்மேற்
பண்ணி யாழ்முரலும்
பழனத் திருப்பனையூர்
வெண்ணிலாச் சடைமேவிய
விண்ணவரொடு மண்ணவர்தொழ
அண்ணலாகி நின்றார்
அவரே அழகியரே.
|
8 |
குரக்கினங்குதி கொள்ளத்தேனுகக்
குண்டுதண்வயற் கெண்டைபாய்தரப்
பரக்குந் தண்கழனிப்
பழனத் திருப்பனையூர்
இரக்கமில்லவர் ஐந்தொடைத்தலை
தோளிருபது தாள்நெரிதர
அரக்கனை அடர்த்தார்
அவரே அழகியரே.
|
9 |
வஞ்சிநுண்ணிடை மங்கைபங்கினர்
மாதவர்வள ரும்வளர்பொழில்
பஞ்சின் மெல்லடியார்
பயிலுந் திருப்பனையூர்
வஞ்சியும்வளர் நாவலூரன்
வனப்பகையவ ளப்பன்வன்றொண்டன்
செஞ்சொற் கேட்டுகப்பார்
அவரே அழகியரே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |